திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

     திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனையில், கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டு, இரண்டு அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய வாகனங்களின் எண்களைப் பதிவு செய்தல், ஓட்டுனர் உரிமம் பெறுதல், புதுப்பித்தல், உள்ளிட்ட பணிகளுக்கு அரசு நிர்ணயித்ததை விட இந்த அலுவலகத்தில், கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்தது. இதன் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி ஜான் கிளமண்ட் தலைமையில் மாலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை சோதனை மேற்கொண்டனர்.
இதில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலர் சேகர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது
 
-இணைய செய்தியாளர்-தேனி ராஜா